Monday, 8 April 2013

முருகனை வழிபடும்போது “அரோகரா” போடுவதன் பொருள் என்ன?

“அரோகரா” என்பதைப் பிரித்தால், அர+ஓ+ஹர எனப் பொருள்படும். அரன், கரன் (ஹரன்) இரண்டுமே, சிவனாரின் திருப்பெயர்கள். ஓங்கார ஒலியுடன் சிவநாமத்தை உச்சரிப்பதே “அர ஓ ஹர” என்பதன் பொருள். இந்த “அர ஓ ஹர” என்பதே , ரகர விகுதி, ஓகார நெடிலுடன் சேர்ந்து “அரோஹரா” ஆனது!

இதற்கு இப்படியும் பொருள்கொள்வர். “அர ஹரோ ஹரா” (அரனே எங்கள் துன்பங்களை அழிப்பாயாக!) என்பதே “அரோஹரா” எனச் சுருங்கியது என்பர். ஞானசம்பந்தப்பெருமானாலேயே இவ்வழக்கம் உருவானதாகவும், ஒரு செவிவழிக்கதை வழங்குகிறது.

திருவைந்தெழுத்து, எத்துணை சக்தி வாய்ந்ததோ, எம்பெருமானின் அத்தனை திருநாமங்களும் அதேயளவு சக்திவாய்ந்தவை என்பது மெய்ஞ்ஞானிகள் கூறும் உண்மை. அவ்வகையில், “அரன்” எனும் நாமமும் மிகுந்த சக்தி படைத்ததே! திருமுறை ஓதியபின், நாம் “அரகர மாதேவா” என்பதும், வடநாட்டார், “ஹர் ஹர் மஹாதேவா” என்பதும் இதனாற்றான்!

எனினும், இறைவனை “அர ஓ ஹர” எனப்போற்றும் வழக்கம், தமிழ்மண்ணிலேயே வழக்கமாக இருந்திருக்கிறது. அதனாற்றான் போலும், விசேடமாக தமிழரின் தெய்வமாம், முருகனின் தலங்களிலெல்லாம், இன்று “அர ஓ ஹர” முழக்கம் கேட்கிறது.

ஈழத்தைப் பொறுத்தவரை, முருகன் ஆலயங்களில் மட்டுமன்றி, சிவன் – பிள்ளையார் – அம்மன், ஏன் திருமால் ஆலயங்களிலும் “”அரோகரா” முழக்கம் கேட்கக் காணலாம். இது, சைவர்கள் எந்தத் தெய்வத்தை வணங்கினும், அத்தெய்வங்களில், தம் முழுமுதலாம், அரனையே காண்கின்றனர் என்ற தத்துவத்தையும் உணர்த்தி நிற்கின்றதல்லவா?

“ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே வையகம் சூழ்கவே!”

No comments:

Post a Comment